Friday, December 10, 2010

சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன்

சந்திர னொளியில் அவளைக் கண்டேன்
சரண மென்று புகுந்து கொண்டேன்
இந்திரி யங்களை வென்று விட்டேன்
எனதெ னாசையைக் கொன்று விட்டேன்

பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்
துயரி லாதெனைச் செய்து விட்டாள்
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்

  - சுப்ரமண்ய பாரதி


டிசம்பர், 2009 பருவத்தில் சென்னை தமிழைச் சங்கத்தில் நடத்திய கச்சேரியில் சஞ்சய் சுப்ரமண்யம் பாடியுள்ளார். அக்குறுந்தகடைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அற்புதமாக பாடியுள்ளார். மலையமாருதம் ராகத்தில் மிஸ்ர சாப்பு தாளத்தில்! மேலும் தகவலுக்கு... www.charsur.com

முதலிரண்டு வரிகளைப் படிக்கும்போது காதல் பாடல் போல இருக்கிறதல்லவா? இரண்டாவது பத்தி முழுவதையுமே அப்படி வைத்துக்கொள்ளலாம். ஆனால் பாரதியார் கவிதைகள் புத்தகத்தில் ‘மஹா சக்தி’ என்ற தலைப்பில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது!. இப்போது மற்ற வரிகளைப் படித்தால் ஆம் என்று சொல்வோம்! ஆண்டாளும் மீராவும் இறைவனைக் காதலனாக எண்ணி பாடியது போல பாரதி சக்தியை காதலியாக நினைத்துப் பாடினாரா? அப்படியும் சொல்ல முடியாது... அப்படி இல்லையெனில் ஏன் ‘சந்திரன் ஒளியில்’ என்று பாட வேண்டும்?  பொதுவாக அது காதல் மயக்கத்தின் குறியீடு அல்லவா?
 

1 comments:

Balu said...

Please compare with
1 சுட்டும் விழிச்சுடர் தான் – கண்ணம்மா சூரிய சந்திரரோ
2 இடத்ததுன்கண் சந்திரன், வலத்ததுன்கண் சூரியன்(siva vakiar)